Sunday, February 21, 2010

பிரியாவிடை

இறுகிய மனமும்
இளகிய கண்களும்
இனியென்னவென்ற வினாவுமாய்
என் தாய்!

ஒருவரது கண்ணீர்த்துளிகள்
மற்றவரது கரத்தில்
மாறி மாறி விழுந்து கொண்டிருந்தன.

இறுதியாய் என்னிடம் அப்பா சொன்னது
ஒரே வார்த்தை தான்
"உம்மாவை......."

அவரைப் பேசவும் விடாமல்
அழைத்துச்சென்றது
அவசரக்கார மரணம்

அந்தரத்தில் நின்றுவிட்ட
ரங்கராட்டினமாய் நாங்கள்!

பெய்துகொண்டிருந்த பேய்மழை
செவிலியர்களின் காலணிச்சத்தம்
தம்பி,தங்கையின் விசும்பல்
இவற்றை விடவும்
உம்மாவின் மவுனம்
உரத்து உரத்துக் கேட்டது

வெள்ளைவாகனத்தில் வந்தவருக்காக
வாசலில்
கருப்புவாகனம் காத்திருந்தது

நாட்காட்டி உதிர்த்த தேதிகளை
மீண்டும் ஒட்டமுடியாதா?

இனி ஊருக்கு வருகையில்
ஒருஜோடிக் கண்களும்
ஒரு கோடிக் கனவுகளும்
குறைந்திருக்கப்போகின்றன

அப்பாவின் நினைவுகள்!
நிலைப்படியிலிருந்து
தாழ்வாரம்வரையிலும்
நிறைந்திருக்கப்போகின்றன