Friday, September 10, 2010

வந்திட்டாங்க சொம்பைத் தூக்கிட்டு....!

ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இரண்டு செய்திகளோடு, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டு நேற்றுமுதல் வலையுலகில் விவாதிக்கப்படுகிற ஒரு பிரச்சினை குறித்து சில வரிகள் எழுத விருப்பம்.

முதல் செய்தி: தன்னை பலாத்காரம் செய்துவிட்டதாக, ஒரு இந்தி நடிகர் மீது புகார் கொடுத்த ஒரு பெண், இப்போது தான் பலாத்காரமே செய்யப்படவில்லை என்று நீதிமன்றத்தில் பல்டி அடித்திருக்கிறார்.

இரண்டாவது செய்தி: பிரபல வயலின் கலைஞர் மீது அவர் வீட்டுப் பணிப்பெண் பலாத்கார குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறார்.

முதலாவது செய்தியில், உண்மையிலேயே அந்த நடிகர் நிரபராதியாக இருந்து, பொய்க்குற்றம் சாட்டப்பட்டு இத்தனை நாட்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தால், அவர் மீது பரிதாபப்படுவோம்; அந்தப் பெண்ணின் மீது நமக்கு எரிச்சல் ஏற்படும். சொந்தப்பகையைத் தீர்த்துக்கொள்ள, பலாத்காரம் என்ற பாதகச்செயல் செய்ததாகப் பசப்பியதற்காக ஆத்திரம் பொங்கும். அத்துடன், இரண்டாவது செய்தியில் பலாத்காரம் செய்யப்பட்டதாகச் சொன்ன அந்தப் பெண்ணின் குற்றச்சாட்டின் நம்பகத்தன்மையின் மீது சந்தேகம் ஏற்படும். இவ்விரண்டு செய்திகளிலும் உண்மையிருந்தால் அந்த ஆண்களைத் தண்டிக்க நாம் எப்படித் துடிக்கிறோமோ, அதே துடிப்பு இவ்விரண்டு செய்திகள் பொய்களாய் இருக்கும்பட்சத்தில் அந்தப் பெண்களை மன்னித்து மறந்துவிட்டு விடாமலிருக்கவும் நமக்கு அறிவுறுத்த வேண்டும்.

உங்கள் சொந்தச் சண்டைகளைத் தீர்த்துக்கொள்ள இணையத்தின் பரப்பையும், அங்கே கட்டப்பஞ்சாயத்து நடத்துகிற கருங்காலிகளின் உதவியையும் நாடாதீர்கள் - ஆணாதிக்கம் என்ற பெயரில்! பெண்ணுரிமை என்பது ஏதேனும் ஒரு காரணத்துக்காக திரும்பத் திரும்ப ஆண்களை எதிர்க்க, ஆண்களின் ஆதரவையே நாடுவது என்ற நகைமுரண் அல்ல! ஒரு பெண்ணின் பரிணாம சிந்தனை வளர்ச்சி அது! அதை கூட்டம்போட்டுத் துவைத்தெடுக்கிற அடாவடித்தனமாக்கி, பெண்ணியத்தைக் கேலி செய்பவர்களின் வாயில் அவல் போட்டு விடாதீர்கள்!

சம்பந்தப்பட்ட இடுகைகளை வாசித்தாலே, அந்த சகோதரிக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க முகாந்திரங்கள் பல வாய்த்திருக்கின்றன என்பதனை அவர் வாயிலாகவே அறிகிறோம். முறைப்படி சட்டபூர்வமான நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு, சொந்தப் பிரச்சினையை, ஆம், இது அவர் சொந்தப் பிரச்சினைதான், பொதுவிடத்தில் விவாதித்து, அனுதாபம் தேடுகிற அனாவசிய முயற்சிகளை செய்து பெண்ணுரிமையை மூணு முழம் பத்து ரூபாய்க்கு மாட்டுத்தாவணி பேருந்துநிலையத்தில் விற்பனை செய்து விடாதீர்கள்.

பெண்ணை வேண்டுமென்றே இழிவு செய்கிறவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் சட்டம், நியாயம், மனிதாபிமானம் போன்றவற்றை மதிக்கத்தெரியாதவர்கள் என்பது வெளிப்படை. அவர்களுக்கு பாடம் புகட்டுவதாக எண்ணிக்கொண்டு, நாமும் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டால், இருபாலாருக்கும் என்ன வித்தியாசம் இருக்கப்போகிறது?

தங்களுக்கு வருகிற தனிமடல்களையும், மின்னரட்டை சம்பாஷணைகளையும் பொதுவில் போட்டு வெளுத்துக்கொண்டிருக்கிறவர்கள் எவ்வளவு தூரம் நம்பத்தக்கவர்கள்? அவர்களையும் ஆண், பெண் என்று பிரித்துப் பார்க்க வேண்டுமா? இதென்ன கேலிக்கூத்து...?

பெண்களுக்காக உதட்டளவில் அனுதாபப்படுகிற ஆண்களின் எண்ணிக்கை பெயரளவில் மட்டும் வேண்டுமானால் அதிகமாக இருக்கலாம். ஆனால், இது போன்ற விஷயங்களை ஆண்,பெண் பாகுபாட்டின் அடிப்படையில் அணுகி, ஊதிப்பெரிதாக்கினால், அது பெண்களின் மீது உண்மையான அனுதாபமும் கரிசனையும் உள்ள ஆண்களையும் நம்மிடமிருந்து விலக்கி, முதலைக்கண்ணீர் விடுகிற மோசடி ஆசாமிகளையே எங்கு பார்க்கினும் கொண்டுவந்து நிறுத்தும் என்பது திண்ணம்

2 comments:

priyamudanprabu said...

பெண்களுக்காக உதட்டளவில் அனுதாபப்படுகிற ஆண்களின் எண்ணிக்கை பெயரளவில் மட்டும் வேண்டுமானால் அதிகமாக இருக்கலாம். ஆனால், இது போன்ற விஷயங்களை ஆண்,பெண் பாகுபாட்டின் அடிப்படையில் அணுகி, ஊதிப்பெரிதாக்கினால், அது பெண்களின் மீது உண்மையான அனுதாபமும் கரிசனையும் உள்ள ஆண்களையும் நம்மிடமிருந்து விலக்கி, முதலைக்கண்ணீர் விடுகிற மோசடி ஆசாமிகளையே எங்கு பார்க்கினும் கொண்டுவந்து நிறுத்தும் என்பது திண்ணம்
///

ஆமாம்

ராம்ஜி_யாஹூ said...

எனக்கு இந்த தனிப்பட்ட நபர்களின் சண்டை பிடிக்க வில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும், உங்கள் எழுத்து நடை, மனோபாவம் நன்றாக உள்ளது . பகிர்ந்தமைக்கு நன்றிகள்,

அந்த பிரச்னையில் உண்மையான கோபம் அவருக்கு மற்ற ஒரு சக பெண் பதிவர் மேல் தான் போல, அந்த இரு ஆண் பதிவர்களும் சும்மா சைடு ரோல் அல்லது இடைவேளை வரை மட்டுமே வரும் கரக்டர்கள் போல.